Girl in a jacket

கட்டுரைகள்

பா. விசாலத்தின் நாவல்

‘‘உண்மை ஒளிர்கவென்று பாடவோ’’

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் கதாகாலட்சேபங்களே நாவல்களாக பரிணமித்து வருகிற இந்த நவீனத் தமிழுலகில், பா. விசாலம் அவர்களது இரண்டாவது நாவல் அளிப்பது ஒரு மனச்சாந்தி.

மனச்சாந்தி என்று சொல்வது ஓர் ஒப்புமைக்காகவோ, ஏனோ தானோ என்றோ அல்ல. இந்த நாவலின் போக்கை அவ்வாறே குறிப்பிட்ட வேண்டும். உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யும் நாவல்கள் நூற்றுக்கணக்கில் - நல்ல நாவல்களும் சேர்ந்து - உலக இலக்கியத்தில் உண்டு. ஆனாலும் சில படைப்புக்களே உணர்வுகள் அடக்கப் பெறும் செயற்பாட்டினை அகத்தே கொண்டுள்ளன.

அப்படிப்பட்டவை மேலை நாட்டிலும் குறைவுதான் என்று, இலக்கிய வல்லலுநர்கள் கணிக்கின்றனர். இந்த நாவல் அப்படிப்பட்ட போக்கில் செயற்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பம்.

கொடுமைகள் - சீற்றங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. அவை இந்த நாவலிலும் ஏராளம், அன்னம்மா-மீனா போன்றோர் அனுபவித்தது தனிப்பட்ட மனப்போராட்டங்கள் என்றால், ‘‘சர்ச்’’ உள்ளே மதில் எழுப்பி, தாழ்த்தப்பட்டவருக்கென உயர்சாதி கிறித்தவர்கள் செய்தவை வேறு இவ்வாறு கொடுமைகள் சித்தரிக்கப்பட்டிருப்பினும், அவை நாவலின் மையப்புள்ளியாக இல்லை. கதை சொல்லியின் வெளிப்பாடு வேறு வகையில் செல்கிறது. அப்படிப்பட்ட முறையால் கொடுமையின் பின்னணி தெரிகிறது-சீற்றம் பிறக்கிறது.

இத்தகைய நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தை விட நாட்டின் விடுதலைப் போராட்டம் பெரிதாக இருந்திருக்க முடியுமா என்றும் தோன்றுகிறது அத்தகைய நிலையிலும் வாழ்ககை நகர்ந்து செல்கிறது. வெறுப்பு மட்டுமே எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு விடவில்லை. உண்மை என்பது மிச்சம் மீதி என்றில்லாமல் இருப்பது என்றால், கொடுமையும் உள்ளடக்கமாகி விடுகிறது. எல்லாவற்றையும் விட உண்மை அற்புதமானது என்ற தெளிவும் ஏற்படுகிறது.

இந்த நிலை ஏற்பட நாவலாசிரியர் ஒரு உத்தியைக் கையாளுகிறார்; கதையிடையே, ஸ்பார்டக்கஸ், ஏசு, கலிலியோ, வீரமாமுனிவர் போன்றோரின் வாழ்வு பற்றிய மகோன்னதம் தோன்றும்படி நிகழ்ச்சிகளைச் சேர்த்திருக்கிறார். வைகுந்தசாமி பற்றிய நிகழ்வுகள் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

விண்ணரசு விண்ணில் இல்லை அது அங்கேதான் இருக்கிறது என்பதை வீரமாமுனிவர் சொன்னாரா என்பது தெரியாது. ஆனால் நாவலாசிரியரின் போக்குத் தெளிவாக இருக்கிறபடியால் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வீரமாமுனிவர் சொல்வதாக நாவலாசிரியர் திருவள்ளுவர் பற்றிக் கூறியிருப்பது, எந்தப் பகட்டுமில்லாது விளங்குகிற அழகு. அவர் இயற்றிய திருக்காவலூர் புராணத்தில், குலசேகர ஆழ்வாரின் ‘‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பனோ’’ போன்ற பதிகங்கள் போல் அன்னை மேரியைப் பாடியிருக்கிறார். வைணவம் போல் கிறித்தவமும் பக்திக்கு முதலிடம் அளிக்கும் சமயம் தானே.

மார்த்தாண்ட வர்ம மகாராசா பற்றியும் நாவலாசிரியர் கூறுகிறார்;. இந்த மகாராஜா கிறித்தவராக மதம் மாறிய தேவசகாயம் பிள்ளைக்கு மட்டும் மரண தண்டனை அளிக்கவில்லை. பிராமண புரோகிதர் அறிவுரைப்படி, அனந்த பத்மநாப சாமிக்கு நடத்திய வேள்விக்காக, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த, பதினைந்து குழந்தைகளை (நாடார், ஈழவர், பரதவர்) திருவன்ந்தபுரத்தில் பல இடங்களில் உயிருடன் புதைக்கச் செய்தவர். (பார்க்க, பேராசிரியர் சிவனடி அவர்களின் இந்திய சரித்திரக் களஞ்சியம் (vol.3) பிராமணருக்கு ஊட்டுப்புறைகள் திறந்தவர் கோசகஸ்ரம் செய்து புண்ணியம் பெற்றவர்.

எனினும் மார்த்தாண்ட வர்ம ராஜா பற்றியோ, அவருக்குத் தூபம் போட்ட ராமய்யன் பற்றியோ, நாவலாசிரியர் விமர்சனம் செய்யவில்லை.

ஆனால் ‘‘ஒரு நட்சத்திரம் போனால் என்ன - வானத்திற்கு என்ன நட்டம். இன்னும் எத்தனையோ கோடி நட்சத்திரங்கள்’’ என்று நாவலாசிரியர் சொல்லும்போது அந்தத் தோரணை ஏற்றுக்கொள்ளல் என்ற மனவிரிவைக் காட்டுகிறது.

மனவிரிவு என்பது பெரிய விஷயம். அப்படிச் சொல்வது ‘‘ஒன்றுமில்லாத ஒன்று’’ என்ற பொருளையும் தரும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. முடிவிற்கு முடிவு இல்லை. சுதந்திர உணர்வுகள் - கனவுகள் இவற்றோடு இவற்றின் எதிராகப் போர்கள் மதங்கள் ஆகியவை விலகாது இருப்பதையே மனித குல வரலாறு என்ற சொல்லிவிட முடியும்.

சற்றேறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் நடக்கிற கதை. வடக்கன் குளமும், அதன் பக்கமுள்ள நாஞ்சில் நாடும் களனாக அமைந்த இந்த நாவலில், கிறித்துவ மததம் மாறியவர்கள் முக்கிய பங்கேற்கின்றனர். வேளாள கிறித்தவரும், நாடார் கிறித்தவரும் தாழ்த்தப்பட்ட கிறித்தவரும், தங்கள் சரிதயைக் கைவிட்டுவிடாது, வெறும் ‘‘சர்ச்’’ போய் வருகிற நெறிமட்டுமே போதுமென்று தங்கள் காரியங்களைப் பார்த்து வருகின்றனர். அவர்களிட்ம ‘‘சர்ச்’’ தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. நாதசுரத்தோடு கல்யாணம் பலகாரவகைகள், குடும்ப உறவு முறைகள், நிகழ்ச்சிகள், நாள் நட்சத்ரம் பார்த்தல், எதிலும் மாற்றமில்லை. பேச்சு வழக்கு எப்போதும் மாறியதில்லை. கிறித்தவர்கள் மட்டுமல்ல, இந்த நாவலில் குறிப்பிடப்படாத மதம் மாறிய முஸ்லீம்களும் அப்படித்தான்; வேளாளன் முஸ்லீமாக மாறிவிட்டால், பிள்ளைப் பட்டத்தைக் கூட சில சமயம் விட்டுக் கொடுக்கமாட்டான். மற்ற இடங்களில் எப்படியோ தெற்கே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்புள்ள கால கட்டத்திலிருந்து, குறைந்த பட்சம் வள்ளலார் காலம் வரை பார்த்தால், இதற்கான காரணகாரியங்கள் எனச் சிலவற்றைச் சொல்ல முடியும்.

மொழியிலும், உணவு உடை விஷயத்திலும் மதத்திலும் ஒரேயடியான மாற்றத்தைப் பெற்றுக்கொண்ட நீக்ரோ அமெரிக்கர் போன்றோர் சங்கதி அல்ல இது. அமெரிக்காவில் கறுப்பினத்தவராகியோர் ஆங்கிலம் பேசி ‘‘சர்ச்’’ போய்வந்து, நிறவேற்றுமை வெறியை அனுபவித்துக் கொண்டே கிறித்தவராகவே அமெரிக்காவில் இருப்பது போன்றதல்ல நமது விஷயம். கறுப்பர்கள் பிஷப் ஆக முடியும் என்பதும் இங்கே சொல்லவேண்டிய ஒன்று. பூங்குன்றனிலிருந்து வள்ளலார் வரை எடுத்துக் கொண்டால் தாங்கள் வணங்கியது வேதகால இந்திர மித்ர கடவுள் அல்ல என்ற நினைவுடன்தான் செயல்பட்டிருக்கின்றனர். மூவேந்தர் காரியங்கள் முடிந்து பல்லவ ஆட்சியின் பின்னர் பாமர ஜனங்கள் என்ன செய்திருக்க முடியும்? அரசர்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது; தங்களையும் வைதிக மதத்தின் ஓர் அங்கமாக நினைத்தக்கொள்ள ஆரம்பித்தனர். அவ்வளவுதான். சற்றேறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் இந்து என்ற சொல் புழக்கத்தில் வந்தது அதுவும், ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட சொல். இதையும் நாம் மறந்துவிட முடியாது. இப்படி வைதிகநெறி பரவுங்காலை தமிழ்நாட்ழன் தென்பகுதியில் அது மிகத் தாமதமாகத்தான் தலையெடுத்திருக்கிறது. அதுவும் அரசர் மூலம்தான். அப்படிப் பட்ட நிலை வந்தபோது, தங்கள் சொந்த நெறியைத் தங்கள் சாதிகளில் மட்டுமே கண்டு தங்கள் சாதிகளையே மதமாக்கிக் கொண்டு விட்டனர் போலும். மதமாற்றத்தால் தமிழன் என்ற அடையாளத்தை விட்டுவிட மறுத்தனர். மதமாற்றத்தால் தங்கள் தமிழ் அடையாளம் மாறிவிடாது என்று நம்பினர். வைதிகத்தில் அது நடவாத விஷயம்.

காலதேச வர்த்தமான நியதியில் எந்தவித உள்நோக்கமும் கற்பிக்காத வகையில், ராமானுஜர் பற்றி இந்த விஷயத்தில் சொல்வதென்றால், தீண்டத்தகாத சைவரை, தீண்டத்தகாத வைணவராக மட்டுமே மாற்றினார் என்று சொல்ல முடியும். சர்ச் எதைத் தந்து விட்டது என்று கேட்டால், வெறும் நாராயண மந்திரம் தந்துவிட்டது என்றும் கேட்கலாம்.

மேலும் ராமனுஜர் தமது மானசீகக் குருவாகக் கொண்டது நம்மாழ்வாரை. நாஞ்சில் நாட்டைச் சார்ந்த உடையநங்கை அம்மையாரின் புதல்வர்தான் நம்மாழ்வார். அவர் வளர்ந்தது திருக்குகூராக இருப்பினும், பிறந்தது திருவண்பரிசாரம் என்னும் பதியிலாகும். ‘‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’’ என்பது அவரது பதிகம். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று சிறப்பிக்கப்பட்ட இந்த நம்வாழ்வார் வேளாளார். அதாவது வேதங்களைப் படிக்கவோ கேட்கவோ கூடாது என்ற வைதிக நெறிக்குட்பட்ட சூத்திரர். இந்த திருவண்பரிசாரம் என்ற நாஞ்சில் நாட்டு ஊரில் இருந்தவர்களும் இப்போது இருப்பவர்களும் சைவசமயச்சார்புடையவரே. ஒரு பெருமாள் தலமாக இருந்த போதும், கோவில் பிரசாதத்தைக் கூட, திருநீறு போல நெற்றியில் அணிபவர்கள்தாம். இந்த உடைய நங்கை அம்மையார் சைவ சமயத்திலிருந்து, எப்படி வைணவத்திற்கு மாறினார் என்ற ஆய்விற்கு வேலை இல்லை. ஏனெனில் பக்தி இயக்கம் வேத நெறிக்குப் புறம்தான். பக்தி இயக்கத்தோற்ற காரணமே வேதநெறி எதிர்ப்பே. தென்னாட்டில் தோன்றிய பக்தி இயக்கம் அன்பு என்ற சித்தாந்த அடிப்படையில் தோன்றிய ஒன்று. வேதத்திலோ இதிகாசங்களிலோ, பகவத்கீதையிலோ, பைபிளின் பழைய ஏற்பாடிலோ, அது இலர;லை. அந்த இயக்கம் காலங்காலமாக இங்கு நிலவிவந்த அறம் என்ற சித்தாந்த அடிப்படையில் அறியப்பட்ட ஒன்று. அறிவர் சித்தர் மூலம் அது தொடர்ந்தது உலகில் புத்தருக்கு முன் அன்பு குறித்துச் சொன்னவர் யாரும் இல்லை என்பார்கள்.

சிவன், விஷ்ணு இருவருமே கடவுள் ஸ்தானத்தில் இருத்தி வணங்கப்பட்டதாக வேதங்களில் இல்லை. சிவலிங்கம் நிந்திக்கப் பட்டிருக்கிறது. விஷ்ணு உபேந்திரன் என இந்திரனின் வேலைக்காரனாகக் கருதப்படுபவர். இத்தனைக்கும் சிவன் விஷ்ணு வேத காலத்திற்கும் முந்தைய கடவுளர். சுடலைமாடன் கறுப்பண்ணசாமி என்று நாட்டுப்புறத் தெய்வங்களாக பிற்காலத்தில் கருதப்பட்டிருக்கும் இக்கடவுள்களைப் பெயர் மாற்றம் செய்து வைதிக நெறிகளுக்குட்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்தச் சொந்தமும் வைதிக மதத்திற்கும் இக்கடவுளுக்கும் இல்லை. குறவர் கடவுளான வேலனையும், வைதிகம் விடவில்லை. காத்திகேயனாகவும் சுப்ரமணியனாகவும், மாற்றியது. பெயர் மாற்றம் செய்து, எதையும் தங்களுடையதாகச் செய்து கொள்வதில் வைதிக நெறியாளர் பிரசித்தி பெற்றவர்கள். எந்த விஷயத்தையும் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்து, அது வைதிக நெறிக்குட்பட்டது என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்த நாவலாசிரியர் எடுத்துக்கொண்ட நிலைக்களன் அப்படிப்பட்டது. வைதிகத்தையும், அவர் மையப்படுத்திக் குற்றஞ்சொல்லவில்லை.

தெய்வம் ஒருபோதும் பெண்வயிற்றில் மனிதனாகப் பிறந்து நம்மை உய்விக்க வருவதில்லை. அது தானாகவே தோன்றும் என்பது சைவ சிந்தாந்தம். மாறாக அவதாரக் கொள்கையைத் தோற்றுவித்து, பின்னர் இராமன், கிருஷ்ணன் போன்றோரை அவதாரமாக ஆக்கியது வைணவம். வால்மீகி ராமாயணத்திலோ வியாச பாரதத்திNலுh அவதாரம் குறிப்பிடப்படவில்லை. கிறித்துவம் அவதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. இஸ்லாம் ஏற்பதில்லை. மத மாற்றம் எல்லாமே தத்துவ விசாரணை செய்தபின்னர்தான் நடந்தேறின என்று சொல்லவில்லை. ஆனால் புர்வகுடியினராகிய தமிழரில் இஸ்லாமிற்கு மாறியோர் பெரும்பாலும் சைவச்சார்புடையோராக இருந்தவர்தாம்.

மதமாற்றத்திற்குச் செல்வாக்குப் பயன்படுத்தப்படவில்லையா என்றால் அந்தக் கேள்வி இராமானுஜர் அவர்கள் காலத்திற்கும் பொருந்தும். வைணவராக மதமாற்றம் செய்யப்பெற்றவர்களும் சரணாகதி தத்துவத்தை ஆய்ந்து அந்த முடிவிற்கு வந்தவர்கள் அல்லர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று சொல்லவேண்டும். பேகன் மனைவி கண்ணகி பற்றி பல விவரங்கள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை. இளங்கோ அடிகள் தோன்றி அதைப் பெருமைப்படுத்த ஓர் அருமையான உத்தியைக் கையாண்டதை நாம் அறிய முடிகிறது. அவர் சமணராக இருந்தார். துறவியாக இருந்தார் என்ற சர்ச்சைகட்கு அப்பால், ஒரு படைப்பாளியாக நாம் அவரைக்காணும்போது, இம்மாதிரி போக்கு புலனாகிறது.

கண்ணகியிடம் சீற்றம் ஏற்பட்டது. போராட்ட உணர்வு இருந்தது. ஆனாலும் கதை சொல்லி எந்த விதத்திலும் யாரையும் பாண்டிய மன்னன் உட்படக் கீழ் மக்களாகச் சித்திரித்து மக்களிடையே பரப்பவில்லை. இந்தப் போக்கு தனித்துவமான சாந்த உணர்வால் மட்டுமே சாத்தியப்படுகிறது. அக்கால நியதியில், சிலப்பதிகார ஆசிரியருக்கு ஊழ் என்ற மக்கள் நம்பிக்கை கைகொடுத்திருக்கிறது. இந்த நாவலாசிரியருக்கு அந்தவழி கிடைக்கவில்லை. ஆனாலும் கட்டுப்பெட்டியாக வாழ்நது வரும் அன்னம்மாள் கூட, பெண்கள் எல்லாரும் இப்படி இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால், அதுவே போதும் என்றாகிவிடுகிறது.

இளங்கோ அடிகளின் பாத்திரமான துறவி கவுந்தி அடிகளும் கூட ஒருமுறை கோபம் கொள்கிறார். ஒரே தடனைதான். படித்த பெண்ணான மீனா வருவதை ஏற்றுக் கொள்கிறாள். கதை அங்கு முடிகிறது. அதுதான் சிறப்பான அம்சம் என்ற சொல்ல வேண்டும். ‘‘அம்மாவுடன் பேசத் தொடங்குகிறாள்’’ என முடிகிற வரிகள் எதையும் சொல்லாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட சித்தர் பண்புடன் திகழ்கின்றன.

மீனா எடுத்த முடிவு லட்சியவாதியின் முடிவா என்ற கேள்வி எழாது. லட்சியங்கள், நெறிமுறைகள் பன்முகத்தன்மை கொண்டு காலதேச வர்த்தமானத்திற்கு உட்பட்டவை.

திருடக் கூடாது என்ற நெறிமுறை 3000 ஆண்டுகளாக நம்மிடையே ஏற்கப்பட்டு வந்தாலும் திருட்டு என்பதன் விளக்கம் காலந்தோறும் மாறுபட்டே வருபவை. தான் கொண்ட முடிவு பிறருக்கு எந்தத் துன்பத்தையும் தராது. தனக்கும் மனச்சாந்தி அளிக்குமென்றால், எந்த முடிவும் நல்ல நெறியுடையதுதான். மீனா எடுத்துக்கொண்ட முடிவு அப்படிப்பட்டது. அப்படிப்பட்ட முடிவுதான் நல்ல நெறிமுறை ஆகிறது.
‘‘பேச்சிறந்த மாசில்மணியின் மணி வார்த்தை’’ என்றான் மணிவாசகன் என்ற சித்தன். ‘‘பேசினோம் பேசாமலே’’, என்றது திருவெண்காட்டுச் சித்தன். ‘‘வெளியாகத் தோன்றிய அருள்.’’ என்றது சிதம்பரம் ராமலிங்கம்.

இம்மாதிரிப் பண்புகளைக் கொண்டு நிற்கும் நாவலைத் தந்தவரையும் ‘‘தமிழ் நாவல் சித்தர்’’ என்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது.


கதை சொல்லி - 2001

பிற கட்டுரைகள்

{load position article}

 

தேவ பாரதியின் ‘‘மாயை’’

ஓர் எழுபது எண்பது ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் சிறுகதையானது ஏராளமான மாற்றங்களைக் கொண்டு விட்டது என்றாலும் அந்த மாற்றங்கள் யாவுமே சிறுகதை இலக்கியத்தைச் செழுமைப்படுத்தின என்று சொல்ல முடியாது. படைப்பாளி சொல்ல வந்தது என்னவென்ற கேள்வியைக் கேட்பதும் அதற்குப் பதில் சொல்வதும் சுலபம். அப்படியானால் சுலபமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றைச் சொல்வதற்குத் தானா கதைகள் பயன்படுகின்றன என்ற கேள்வி தானாக எழுகிறது. இலக்கிய உலகில் அப்பாவிகள் அதிகம்.

‘‘சிந்திக்கவும் - சந்தோஷிக்கவும் - பிரியவும் - துயரமுறவும் - ஏங்கவும் - அழவும் ஆகிய வாழக்கைப் பயணத்தில்’’ என்று ஒரு கதையில் தேவபாரதி குறிப்பிடுகிறார். சிறுகதை உள்ளிட்ட எல்லாப் பிரிவிற்கும், ஒரு படைப்பைப் பொறுத்தவரை இதுவே காரணம் என்று சொல்லி விடலாம்.

தேவ பாரதியின் ‘‘மாயை’’ என்ற கதையைக் குறிப்பிட்டு சா. கந்தசாமி ஞானரதத்தில் எழுதிய போதுதான் அவரது கதைகள் பரிச்சயமாயின. ‘‘மாயை’’ போன்ற கதைகள் தமிழில் மிகக் குறைவு என்று  தான் இப்போதும் சொல்ல வேண்டும்.

அந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்போது, சில சமயம் திரும்பவும் படிக்கும்போது, சிறுகதைக்குரிய இலட்சணங்கள் யாவும் பொருந்தியுள்ளன என்பதோடு எப்படிப்பட்ட லட்சணங்களைச் சிறுகதை கொண்டிருக்கும் என்பதும் ஒரு வகையில் தெளிவாகிறது.
‘‘மாயை’’ கதையில் கதை சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் சா. கந்தசாமி சொல்வதைப் போல கதை வெளியேற்றப்படுகிறது.

சிறுகதையைப் பற்றிய எத்தனை எத்தனையோ விளக்கங்களுக்கும் அப்பால், சிறுகதையில் தான் அந்த ஆசிரியன் பளிச்சென்று தெரிகிறான் - நாவலை விட - என்று சொல்வது சரியாகயிருக்கும்.

சரி - ஆசிரியன் தெரிகிறபோது கதை தெரிகிறதா என்றால் இல்லையென்று சொல்லிவிடலாம். கதையும் கதை மாந்தரும் ஆசிரியன் வெளிப்பாட்டில் மறைந்து விடுகிறார்கள். கதை மாந்தர் மறைகிறபோது இப்படியாக ஆசிரியன் மட்டுமே நிலைக்கிறான்.

வாசகனும் நிலைக்கிறான். வாசகனின் அந்த நிலையை எப்படிச் சொல்வது? வழியில்லை. இன்னொரு கதை தான் பிறக்க வேண்டும்.

இவ்வாறு இத்தனை எளிதில் கோடிட்டுக் காட்டி விட முடியாத நிலையில். எது சிறுகதை அல்ல என்று பேசிப் பார்க்கலாம்.

ஒரு சிந்தனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போதே உலகில் எங்காவது ஒரு புதிய பரிமாணம் தோன்றியிருக்கும்.

சிறுகதைக்கென்று ஓர் உயிர்நாடி உண்டு என்றும் சொல்ல வேண்டும். எழுத்தேயில்லாத மொழியிலும் கூட கதை பேசப்படுகிறது என்னும்போது இந்த எண்ணம் உறுதிப்படுகிறது. இந்த உயிர் நாடியைச் சிறிது தொட்டுப் பார்த்து விடலாமேயொழிய படம் பிடித்துக் காட்டி விட முடியாது. அவ்வளவு கிடைத்தாலே போதும் என்று சொல்லலாம். சொற்களையும் உருவங்களையும் கொண்டு நடத்து வரும் கதை அந்தர்தியானமடைவது இந்த உயிர் நாடியில் கலக்கும் போது தான்.

‘‘மாயை’’ கதையில் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண் - ஒரு விதவையம்மாள் - ஒரு புருஷன் - ஒரு கறுப்புப் பு+னை - இத்தனை பேர் தாம். இந்தப் பூனை கூட தேவையற்றதோ எனத் தோன்றும்.

இரு பெண்களின் பேச்சு பணக்கஷ்டத்தைப் பற்றி. விதவையம்மாள் தன்னைப் போல் பொருளாதார நிலையில் அவதிப்படுகிற அந்தப் பெண்ணிடம் மிக ஆதரவாகப் பேசுகிறாள். அப்படித்தான் தோன்றுகிறது. பொதுவாகப் பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பதில் அடைந்து வரும் கஷ்டம் பற்றிய பேச்சாகத் தான் தெரிகிறது. கடைசிவரை அப்படித்தான் தெரிகிறது. ஆனால் அப்படியில்லை என்றும் தோன்றச் செய்கிறார் ஆசிரியர். விஷயம் வேறு வழியில் ஆராவாரமில்லாத முறையில், விதவையம்மாள் பேசும் தொனி மூலம் காட்டப்பெறுகிறது. இத்தனைக்கும் சம்பாஷணை வெகு இயற்கையாக - விகல்ப்பமில்லாத முறையிலேயே செல்வதை ஒருவித பயத்துடன் படிக்கிறோம். அந்தப் பெண் கறுப்புப் பூனையை வைவதின் மூலம் தான் சிறிது எரிச்சலை காட்ட முடிகிறது. கதாசரியனின் தொனி கதை முழுவதிலும் விரவி நிற்கையில் அது கூட - அந்தக் கறுப்புப் பூனை சங்கதி கூட - அதிகப்படிதான். இதுதான் அது - இதற்காகத்தான் அதைச் சொல்கிறேன் என்று காட்ட வேண்டிய அவசியமில்லை. அவசியமில்லைதான். என்றாலும் அதை அவ்வாறு காட்டி விடுவதால் கதை அம்சம் எந்தச் சீர்குலைவையும் பெற்று விடவில்லை.

விதவையம்மாள் சென்று விட்ட பின்னர், கணவன் வீடு வந்து சேர்ந்ததும் அந்த சம்பாஷணையின் உயிர்நாடியானது அந்தப் பெண்ணை ஏங்கி அழச் செய்திருக்க முடியும். அவ்வாறு இல்லை. எந்தப் புகாரும் இல்லை கணவனிடம் முகம்புதைத்து விம்ம ஆரம்பித்தவள் ஒன்றும் இல்லை என்கிறாள். கறுப்புப் பூனையை வைகிறாள் அதோடு சரி.

கையாறு நிலை என்ற சொல் வழக்கு நமது மரபிலே உண்டு. அந்தப் பெண் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது நிற்பது போன்ற காரியங்களைச் செய்யாது, இந்த வாழ்வின் அசைவிற்கு ஈடு கொடுக்கிறாள். அவ்வாறு கணவனிடம் எதையும் சொல்லி அழாமல் இருந்ததின் மூலம் எத்தனையோ விஷயங்கள் சொல்லி முடிக்கப்படுகின்றன.

தேவபாரதியின் வேறு ஒன்றிரண்டு கதைகளிலும் இந்த மாயை என்ற அருமையான கதையின் கருவும் உருவ அமைதியும் வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். குறிப்பாக ‘‘மாயை’’ என்ற கதை ஆசிரியருக்கும் கூட மிகவும் பிடித்திருக்கலாம்.

சந்தோஷிக்கவும் - ஏங்கவும் - அழவும் ஆகிய வாழ்க்கைப் பயணந்தான் இது. மிக நேர்த்தியான வடிவில் தரப்பட்ட இது பலமுறை படிக்கப்பட வேண்டிய கதை. நான் பல தடவை படித்தனுபவித்த ஒன்று. தமிழில் வந்த சிறந்த சிறுகதை என்றோ சிறுகதைகளில் ஒன்று என்றோ சொல்வது உபசார வார்த்தையில்லை.


- 1996


 

பிற கட்டுரைகள்

{load position article}

 

க.நா.சு. - கடைசி நாட்களில்

கடைசி இரண்டாண்டுகளில்தான் அவருடன் பழக முடிந்தது. முன்பு அறுபதுகளில் அவர் தில்லி செல்லுமுன் ஓரிருமுறை பார்த்ததுண்டு. பள்ளி முடியும் தறுவாயிலேயே ‘‘பொய்த் தேர்வு’’, ‘‘ஒரு நாள்’’ போன்ற நாவல்களைப் படித்துவிட்டபோதிலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. எண்பத்தேழில் மேநாட்டு இலக்கியங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளச் சென்ற வகையில் அடிக்கடிச் சந்திக்க முடிந்தது. ஏழெட்டுக் கூட்டங்கள் ‘‘முன்றில்’’ இலக்கிய இதழ் சார்பில் நடந்து பிரஞ்சு, ஸ்பானிஷ் நூல்கள் பற்றி நிறையப் பேசினார். சிலப்பதிகாரம் பற்றி ஒரு கூட்டம். குறிப்பிட்ட சில பேர்தாம் வந்தார்கள். அதுவே போதும் என்பார். அந்தக் கூட்டங்களில் மேநாட்டு இலக்கியம் பற்றிப் பேசினாலும், வீட்டில் சந்திக்கும்போது, திருமூலர் - காரைக்காலம்மையார், குறுந்தொகைக் கவிஞர் பற்றியே அவர் மகிழ்ச்சியோடு உரையாடுவார். வள்ளுவர், இளங்கோ படைப்புகளில் காணப்படும் சில நுணுக்கங்களை மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறார். மற்ற நண்பர்களிடம் வேறு பலவற்றையும் பற்றிப் பேசியிருக்கக்கூடும். காரைக்காலம்மையார் கவிதைகள் தவிரவேறு பக்தியிலக்கியத்தில் எவரையும் கடைசி இரண்டாண்டுக் காலத்தில் பேசியதாகத் தெரியவில்லை. கரைக்காலம்மையார் கவிதைகளைப் பக்திப் பாடல்களாக அவர் மதித்ததில்லை - சிறப்புமிக்க இலக்கியமாக எடுத்துக்காட்டியுள்ளார். கடவுளை இகழ்ந்ததுமில்லை. யாரை இகழ்வது?

கூட்டம் முடிந்தால் ‘‘நானே வீடு போய்விடுகிறேன் - உங்களுக்கு எதற்குச் சிரமம்’’ என்பார். இரவில் அவருக்குப் பார்வை சரியாக இருக்கவில்லை. ‘‘அதெல்லாம் முடியாது-அம்மாவுக்கு யார் பதில் சொல்வது’’ என்று கூறி வண்டி ஏற்பாடு செய்வதுண்டு.

க.நா.சு. கடவுளைப் பற்றிப் பேசினால் நகைச்சுவையோடிருக்கும். அதிகமாகப் பேசியதில்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் அந்தக் ‘‘கந்தசாமிப் பிள்ளை’’ பேசியது போலிருக்கும். ஒரு தடவை தெருவில் கோவில்வாகனமொன்று ஊர்வலம் வருவதைச் சன்னல் வழிபார்த்து, ‘‘இங்கே நம்ம பெரியார் இத்தனை கூறியும் எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கு இல்லையா?’’ என்றார்.

தற்காலப் படைப்பாளிகளில் அசோகமித்திரன், நகுலன், சா.கந்தசாமி, பிரமிள், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் ஆகியோரின் எழுத்து பற்றி நிறையப் பேசியிருக்கிறார். கடைசியில் தில்லி செல்லுமுன், அவர் வீட்டில் படித்துக்கொண்டிருந்தது ‘‘இருவர்’’ என்ற புத்தகம்.

அவர் எல்லா எழுத்துகளையும் படித்துவிடுவது தெரிந்த விஷயம். ஆனால் மாத நாவல்களையும் விடுவதில்லை என்பது செய்தியாக இருக்கும். யாரையும் தலைக்குமேல் தூக்கி வைத்துப் பேசுவதில்லை. யாரையும் இகழ்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்த்ததுமில்லை. தன்னுடைய விமர்சனப் பாங்கில் எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.

புதுமைப்பித்தன் முதல் பிரபஞ்சன் வரை என்று கூறி இன்னும் நிறைய எழுதவேண்டுமென்று விரும்புவார். பெரியாரைப் பற்றிக் கழகக் கவிஞர் குடியரசுவிடம் மகிழ்ச்சியோடு உரையாடுவார். நீல பத்மநாபனின் ‘‘தலைமுறைகள்’’ நாவல் குறித்தும், பூமணியின் நாவல் குறித்தும் பேசுவார். கடைசியாகக் குறிப்பிட்டுப் பேசியது தமிழவன் நாவல் பற்றி.

வணிகப் பத்திரிகைகளும் சில பக்கங்கள் இலக்கியத் தேடலுக்காக ஒதுக்கினால் நல்லது - எழுதலாம் என்பார் - எழுதியுமிருக்கிறார்.

நாவல், சிறுகதை என்பதெல்லாம் அவருடைய அபிமான விஷயமாகவிருந்தாலும், மிக முக்கியமாக உலகத் தத்துவங்கள் அவருடைய எழுத்துகளில் பரவலாக வெளிப்பட்டதை அறியமுடியும். எந்தக் கூண்டிலும் அவரில்லை என்று தெரிகிறது.

கடைசி ஆண்டுகளில் வைதீக எதிர்ப்பைப் பல கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க இலக்கியமும் வைதீக எதிர்ப்பால் தோன்றியது தான் என்பது ஒன்று. திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் என்ற ஆங்கில நூலில் குறளின் வைதீக எதிர்ப்பு பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சங்க இலக்கியங்கள் பற்றி அவரது கருத்துகள் நிறைய வெளியாகவில்லையேயொழிய கையெழுத்துப் பிரதிகளாக வேண்டியவை இருக்கின்றன. இன்று மிகவும் கஷ்டத்துடன் கையாளப்படுகிற பல இலக்கிய உத்திகளைக் குறுந்தொகைக் கவிஞன் மிக எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறான் என்று சொல்லுவார்.

பிரசுரமாகாவிட்டாலும் பதிப்பிக்காவிட்டாலும் நாள் தோறும் சில பக்கங்கள் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

புதுமைப்பித்தன் போல க.நா.சு.வும் ஒரு agnostic போலும். ஆயினும் சிவம் - சைவம் என்பதில் சில சமயம் ஆர்வம் இருந்திருக்கிறது.

க.நா.சு.விடம் வாக்குவாதம் செய்தல் எளிது. வாதிப்பவர் போக்கிலேயே பேசச்செய்து அவர்களுக்கு வேண்டியதையே தானும் பேசி மேற்கொண்டு ஒன்றிரண்டு கூறுவார். பேசாமல் இருந்து விடுவதும் உண்டு. ஒரு தடவை, ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி’’ என்று மணிவாசகர் சொல்லும்போது, வடநாடு செல்ல முடியவில்லையே என்ற அவரது வருத்தமும் தெரிகிறது என்று எழுதியிருந்தார். ‘‘ஐயா - மணிவாசகரின் தென்னாடு ‘‘திசை’’ சம்பத்தப்பட்டதல்லவே. அது ‘‘தென்’’ என்ற தனிச் சொல்லோடு வந்தது,’’ என்று சொன்னதும் ‘‘இருக்கும் - மொழி பற்றியும் இம்மாதிரி விஷயங்களைத் தெரியவேண்டியது அவசியம்’’ என்று கூறிக் கொண்டார்.

கடைசிக் காலத்தில் இன்றைய எழுத்தாளர் சிலரைப் பற்றிக் கவிதைகளும் எழுதி வைத்திருந்தார் - பிரசுரமாகவில்லை. அதில் ‘‘நகுலன்’’ பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.

தில்லியில் இறுதி நாள்களிலும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ‘‘இங்கே குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது - ஆனால் ரசிக்கும்படி உள்ளது’’ என்று எழுதியிருந்தார். தனக்குப் பிடித்தமான சாப்பாட்டையும் மறக்கவில்லை. அன்றிறவு ‘‘ஹார்லிக்ஸ்’’ கேட்டிருக்கிறார். ‘‘நான் தூங்கி விடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன்’’ என்று கூறினாராம். தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்று சொன்னதாகவும் தகவல்.

க.நா.சு.விற்கு அடுத்த பிறவி பேரில் நம்பிக்கை இல்லை. ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால், தனது கடைசி நாள்களைப் பற்றி ஓர் அருமையான கட்டுரை நமக்குக் கிடைக்கும்படிச் செய்வார்.


பிற கட்டுரைகள்

{load position article}

 

அது வேறு காலம்

இளங்கோ என்னும் படைப்பாளி சேரன் தம்பியா? சமண சமயத்தவரா? என்பது பற்றியெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது – அக்கறையும் இல்லை. அந்த மாபெரும் இலக்கியவாதி பூம்புகார் நகரத்தில் வாழ்ந்தவர் என்று மட்டும் தாராளமாக நம்பலாம். அங்கிருந்து – அந்த பூம்புகார் நகரத்து மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் பகுதிகளைக் கடந்து நாளங்காடி, கூடல், இடைகழி நீங்கி குடமலை, பின்னர் கோழி என்னும் உறையூர் சார்ந்த இடங்களுக்கெல்லாம் அவர் தனியாகத்தான் சென்றிருக்க வேண்டும்.

சங்ககால பேகன், கண்ணகி கதை, அந்தப் படைப்பாளியை துளைத்தெடுத்திருக்கிறது. சமகாலத்தில் அவ்விரு பாத்திரங்களையும் பூம்புகார் வாசிகளாக்கி நமக்கு தருகிறார். பிரிந்த கணவன் திரும்ப வந்ததும் இரவோடு இரவாக கிளம்புகின்றனர். படைப்பாளி இளங்கோதான் கிளம்புகிறார். நெடுங்குன்றமும் சிறுமலையும் நீங்கி, தாழ்ந்த குலைகளையுடைய வாழையைப் பற்றிச் சொல்வதால் அது மலை வாழைப்பழமாகவுமிருக்கும். அது திண்டுக்கல் பகுதியாகவும் இருக்கலாம். காவிரியை வாழ்த்தியவர், பொய்யாக் குலக்கொடி வைகையின் திருமருத்துறையில் நீராடியிருக்கக் கூடும். அங்காடி மற்றும் நவரத்தினகூல வணிகர் வீதிகளைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.

இத்தனை இடங்களையும் சுற்றி வந்திருக்கின்றார். வெகு விமரிசையாக விவரங்களைத் தருகிறார். இவ்வாறு இம்மாதிரி இடங்களுக்கெல்லாம் துறவிகள் செல்வதுண்டா என்றெல்லாம் கேட்க வேண்டாம். இளங்கோ ஒரு படைப்பாளி. உலகில் ஒன்றிரண்டு பேரைத்தான் இவரோடு ஒப்பிட்டுச் சொல்ல முடியும்.

காவிரியையும் வைகையையும் போற்றிவிட்டால் போதுமா? வஞ்சியின் பேரியாறு என்ன பாவம் செய்தது? அதன் மணல் மேட்டைப் பற்றி கூறுகிறார் – பூங்குன்றன் போல. இருக்கட்டும். இத்தனை விவர அடுக்குகளை தமது காதைக்குள் அடைத்தவர், கதைக்கே உயிர்நாடிச் சம்பவமான கோவலன் கொலையை எப்படிச் சொல்கிறார் – ஒரு செய்தித்தாள் நிருபர் கூற்றாக சில வரிகளிலேயே சொல்லி முடிக்கிறார். இந்த போக்கு கூட, இளங்கோ போன்ற மகத்தான படைப்பாளிகளுக்கே கைவரக்கூடும்.

கோவலன் கொலைக்கு காரணமாகயிருந்தோர் மீது நமக்கு கோபம் ஏற்படவில்லை. மதுரையை எரித்த கண்ணகி மீதும் கோபமில்லை. மாதவி மீது இல்லவே இல்லை. என்ன தந்திரத்தைக் கையாண்டார் இந்த இளங்கோ?

சாந்தம் என்ற உணர்வை தன்னகத்தே கொண்டவர்கள்கூட, அதை பிறரிடம் ஏற்படுத்திவிட முடியாது – மொழிமூலம். சாந்தம் தன்னையே பார்த்துக் கொள்வதாகிறது. எட்டுச் சுவைகளில்கூட சாந்தம் சேர்க்கப்படவில்லை. சமண முனிவர்கள் அதையும் ஒன்றாக்கி நவரசம் பண்ணினர் என்று சொல்கிறார்கள்.
ஒரு படைப்பு பற்றி பேசும் நமக்கு அந்த ஆய்வெல்லாம் வேண்டாம்.

இதையெல்லாம் ஏன் சொல்ல வந்தேன் – சமீபத்தில் நான் படித்த கவிதை வருமாறு:


இது வேறு காலம்

காற்றுப் புகா சீசாவில் வைத்துக்
காத்து வந்தேன் அக் கனவை

பிரமிக்கும் ரூபமும் யெனவனமும் ததும்ப
ஒரு இளவரி போல் வீற்றிருக்கும் அதை
பார்த்துப் பார்த்து மிதந்து கொண்டிருப்பேன்

எங்கு போய்த் திரும்பினாலும்
சீசாவை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் எனக்கு

எப்போதே வந்த ஊழி
கனவையும் அக்காலத்தையும்
வசீகரக் கற்பனைகளையும்
அலங்கார நினைவுகளையும்
ஈவிரக்கமின்றி அள்ளிச் சென்றுவிட்டது.

பித்தாகி
பெயர் தெரியா இத்தீவில்
அலைந்து கொண்டிருக்கும்போது
இன்று காலை காலில் தட்டுப்பட்டது

அது தானா
உறுதிப்படுத்திக்கொண்டேன்
கிடைத்த அதிசயம் குறித்த பரவசம் ஏதுமில்லை

பொறுமையாய்
அக்கனவை எடுத்து
ஒரு முறை வாசித்தேன்

மறுபடி எதுவும் புகாதவாறு மூடிக்
கடலில் விட்டேன்
சலனமின்றி மிதக்கும் கனவை



இது வேறு காலம்

இது கவிஞர் ரவிசுப்ரமணியன் எழுதியது.

கவிஞர் அறிவுமதியின் “அம்மா, அம்மா – கடலம்மா...” என்ற கவிதை வரிகள் நம்மை படுத்தியபாடு பெரிது.

“வெட்டினான்” – என்று எழுதினால் இரத்தம் வரவேண்டும் என்று யாரோ சொன்னார்களாமே – அதுவேதான். அறிவுமதியின் வரிகளில் நமது கண்ணீர் சிந்தும். அந்த வரிகளின் சரணாகதித் தன்மை அன்னைக்கும் அன்பிற்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்கச் செய்ய, ஊழிக்கூத்திலும் கூட, அந்த அன்பே மேற்செல்கிறது. கடலன்னை மீண்டும் நம்மைத் தண்டிக்கத் துணியமாட்டாள்.

கவிஞர் ரவிசுப்ரமணியனின் ஊழிக்கூத்து மேலே சொன்ன கவிதையில் வேறுவிதமாகச் செல்கிறது – அது வேறு காலமே தான்.

தன்னையே பார்த்துக்கொண்ட ஒருவனின் நிலை அது. ஊழிக்கூத்து இருக்கட்டும். சாவில் கூட அப்படியேதான் இருக்கும். இளங்கோ என்ற படைப்பாளி ஞாபகத்திற்கு வந்த காரணம் இதுதான். யாரையும் குற்றவாளிகளாக்கிவிடாது நிகழ்ச்சிகளை சொல்லிச் செல்லும் இயல்பு. அது வாசகனுக்கு படைப்பாளி தரும் பரிசு.

நம் இளங்கோ ஊழ்வினையைச் சொல்லத்தான் செய்கிறார். அவர் காலம் அப்படி. யாரையும் குற்றம் சொல்லாதபடி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற நிலைக்கு உட்படுத்தும் படைப்பாளியின் தந்திரமாகவும் இருக்கலாம். அது தந்திரமாக இருந்தால்கூட நாம் மிகவும் மகிழ்ச்சி அடைய முடியும்.

‘ஈவிரக்கமின்றி’ – என்ற ஒரு வார்த்தை ரவியின் கவிதையில் நமது போக்கை சற்று நிறுத்துகிறது. ‘கல்லாக்களிமகன்’ – என்று இளங்கோவும் கூட சொல்லிக் கொள்கிறார்.

“கடந்து வந்த பாலங்களை எல்லாம் தகர்த்து விட வேண்டும்.”

“எந்தப் பாலங்களை.”

“ஒவ்வொரு கடைசிப் பாலத்தையும்.”

இது ரஷ்யாவின் பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவின் கூற்று.

“எல்லாவற்றையும் மறுத்து விடுதல்” என்பது ஜே.கே.யின் ஒரு தத்துவம் – அவரது இந்த தத்துவம் உட்பட.

பொதுவாக ரவிசுப்ரமணியத்தின் கவிதைகள் சிறிது விரக்தியை தோற்றுவிப்பதாகவே தெரியும் – ஸென் பவுத்த சாயலும் இருக்கும். அத்துடன் தென்புலத்து சித்தர் சம்மந்தமுடைய உணர்வை அடக்கியவை என்பதும் உண்மை. குறிப்பு என்ற இவரது கவிதையைப் படித்தாலும் இது தெரிகிறது.

அம்மாதிரிப்பட்ட உணர்வை தோற்றுவிப்பதில் இவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் சொல்ல வேண்டும்.

- 2007

 

பிற கட்டுரைகள்

பா. விசாலத்தின் நாவல...

தேவ பாரதியின் ‘‘மாயை...

க.நா.சு. - கடைசி நாட...

 

தாய்மொழியும் தந்தைமொழியும்

ஒரு தடவை சிதம்பரம் ராமலிங்க வள்ளலார் ஒரு சங்கராச்சாரியாரிடம் வாதம் நடத்தியபோது “சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாக இருக்கலாம், நீங்கள் சொல்வதுபடி, ஆனால் தமிழ் தந்தை” என்று சொல்லியிருக்கிறார்.

வள்ளலார் ஞானத்தால்சித்தர் பரம்பரையினர். தாய்மொழி தமிழ்மீது இயல்பாகவே இருந்த அன்பால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். ஒருவேளை சொல்ல வேண்டிய அவசியம் வந்தபோது சில கருத்துக்களைச் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

ஆனால், ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் சொல்கிறார்: “நம் தாய்மொழி தமிழ் தந்தைமொழி சம்ஸ்கிருதம்” என்று. இது வள்ளலார் தம் மனோபாவத்தில் சொல்லப்பட்ட ஒன்றல்ல. ஊன்றிக் கவனிக்கும்போது “இது யாருக்காகச் சொல்லப்பட்டது, எதற்காக?” என்ற சில விவரங்கள் தெரிகின்றன. அவரைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அவை பகிரங்கமாகப் பேச முடியாத அளவுக்கு இசகு பசகானவை என்று தெரியவரும்.

Max Plank இந்நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் நமக்கருளிய Quantum theory-ஐத் தெரிந்து கொண்ட உலகில் இன்னமும் நாடு, இனம், மொழி என்று பேசி வருவது குறுகிய மனப்பான்மையென்று சொல்வது எளிது. ஆனாலும் சுதந்திர உணர்வு என்பது எல்லாராலும் போற்றப்படும் நிலையாதலால் எல்லாருக்கும் தேவைதான் – துறவிக்கும்கூட.

மேலும், சங்கராச்சாரியார் சொன்னதால் அதைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாத்தாகி விடுகிறது. வள்ளலார் நிலையிலிருந்து வாதமிட இப்போது யாருமில்லை. உலக வரலாறு, தத்துவம் பற்றிய அறிவைத் துணையாகக் கொண்டு சிலவற்றை எண்ணிப் பார்க்க முடிகிறது.

இலத்தீனையோ கிரேக்கத்தையோ தந்தை மொழி என்று ஐரோப்பிய இன மக்கள் கூறி வருவது போன்று இதைக் கருத முடியாது. ‘‘ஆங்கிலம் எனது தாய்மொழி. இலத்தீன் தந்தைமொழி’’ என ஆங்கிலேயன் கூறினால் அது சரியாகவே இருக்கும் வரலாற்று ரீதியான தவறும் இல்லை. அதைப் போன்று ‘‘குஜராத்தி தாய்மொழி. தந்தைமொழி சம்ஸ்கிருதம்’’ என்று கூறுவதும் வடநாட்டவர்க்கு சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டவருக்கு அது எவ்வாறு பாதிப்பை உண்டு பண்ணும் என்பது வேறு விஷயம்.

தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரைக் குறித்துத்தான் இவ்வாறு சொல்லப்பட்டது என்றால் அதுவும் வேறு விஷயம்தான். அப்படி இருந்தாலும் வரலாற்று ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் வடமொழியை தந்தை மொழி என்று ஒரு நாளும் கூற மாட்டார். இது அதைப் பற்றியதல்ல. இன்று வடமொழியைப் பரிபாலித்து, நேசித்து, அது எங்கள் தந்தை மொழி என்று தமிழ்நாட்டில் ஒருசாரார் கூறினால், அது அவர்கள் விருப்பம். இப்பொழுது வரலாற்று ரீதியாக அது சரிதானா என்று மட்டும் பார்ப்போம்.

நாட்டுப்பற்று என்றால்தான் என்ன? இனங்கள் ஒன்றிற்கு மேலுள்ள நாட்டில் எது நாட்டுப்பற்று? என்னுடைய கிராமத்தில் வசிக்கும் கிழவருக்கு ‘‘இந்தியா’’ என்கிற பெயரே தெரியாது. தூரத்தில் தென்படும் மலையும் ஓடுகிற அந்த இடத்தின் ஒவ்வோர் அசைவையும் ரசித்துக் கொண்டிருப்பவர் அவருக்குத் தெரிந்த ராமரும், கிருஷ்ணரும், காந்தியும், நேருவும் தமிழ்தான் பேசுவார்கள். புளிக்குழம்பு சாப்பிடும் ஆட்களாகத்தான் அவர்களைக் கருதிக் கொண்டிருகிறார். அந்தக் கிராமத்தை மட்டும் உயிராகக் கொண்டிருக்கும் கிழவர் நாட்டுப் பற்றுடையவராக மாட்டாரா?

நல்லது. வரலாறும் நில நூலும் படித்து, இந்த நாடு பல இனங்கள் கொண்டு நாடு;  இந்தியா என்ற பெயரே மேல்நாட்டவர் கொடுத்தது; அது சிந்துநதி பாயும் பகுதியை மட்டுமே குறிக்கும்; இந்தியா என்ற சொல்லோ இந்து என்ற சொல்லோ பூங்குன்றன் முதல் சமீபகாலம் வரை யாரும் பயன்படுத்தவில்லை; அது 1902ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய ரெகுலேட்டரி சட்டமூலம் வந்தவொன்று; பாரதம் என்ற சொல்லைக்கூட பாரதிக்கு முன் யாரும் கையாளவில்லை; பாரத நாட்டின் தலைநகரம் எதுவென்றால் தெரியாது; பாரத மன்னன் யார் என்பதே சந்தேகம்; ஆரிய வர்த்தத்தின் எல்லை நர்மதா நதியோடு முடிகிறது என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

தெரிந்து கொண்டு, பின்னர் திடீரென, ஆரிய புத்திரன் - ஆரியன் என்றால்தான் அது மேம்பாடு தமிழ் என்று சொல்லி விட்டால் அது ஒருமைப்பாடு அல்ல என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ் என்று சொல்வதெல்லாம் பிரிவினைவாத அடிப்படை என்று கூற முன்வந்தால், ஆரிய - இந்தோ ஆரிய - இந்து என்று சொல்வதும் பிரிவினைவாத அடிப்படைதாம். இந்த நாட்டினரின் முன்னோர்கள் வேதகால ரிஷிகள்தாம் என்று கூறுவதும் பிரிவினை வாதம்தான்.

உண்மையைச் சொல்வதென்றால் ‘‘ஆரிய’’ என்றாலே ‘‘மிலேச்சர்’’ என்றல்லவா தமிழிலே பொருள்? வடமொழியில் ‘‘உயர்ந்த’’ என்ற பொருளை வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் வடமொழியாளரல்லவே. திண்டிவனம் பகுதியிலுள்ளவரை ஆரியர் என்றால் எப்படிப் பொருந்தும்? எனவே ஆரியர் என்று சொல்லுவோம்; தமிழர் என்று சொல்வது ஒருமைப்பாடாகாதென்றால் அது ஒருவகை பிரிவினைவாதம்.

இந்தப் பகுதி மக்களின் உணவு ‘‘அரிசி’’. உலகில் அரிசி பயிரிடுவதில் அதிக ஊக்கம் காட்டுவது இங்குதான். இந்த ‘‘அரிசி’’ என்ற சொல்தான் கிரேக்கத்தில் ‘‘ஓர்சி’’ என்றும் ஆங்கிலத்தில் ‘‘ரைஸ்’’ என்றும் மருவியுள்ளது என்பர்.

ஒருமைப்பாடு பேசும் இந்த நாட்டில் இதை இனி எப்படி வழங்குவார்கள்? அரிசி சாப்பிடாத மக்கள் அதை எப்படிச் சொல்கிறார்களோ அந்தச் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் ஒருமைப்பாடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் பழம்பெருங் குடிமக்களாகிய நமது கலாச்சாரத்தைப் பாதிப்பதாகாதா?

பின்னர் நமது சமயம். இந்து மதம் என்ற சொல்லை இப்பகுதியிலுள்ளோர் ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னரே அறிந்துள்ளனர். இங்குள்ள ஆகமங்கள் வேறு. வடக்கேயுள்ளவை வேறு. ஒருசில பிற்கால அரசர் ஆணைக்கு ஏற்ப வடமொழி மந்திரங்கள் ஏற்பட்டவனவே யொழிய (அந்த அரசர்களும் வடபுலத்துத் தொந்தம் கொண்டாடியவர்கள்தாம்) தமிழ் மொழியைத் தவிர சமயத்திற்கும் தெய்வத்திற்கும் வேறு எம்மொழியையும் நாடவில்லை. இந்திரனையும் மித்திரனையும் இந்த நாடு கடவுளாகக் கொண்டதில்லை. கடவுளரே தமிழில் பாடியிருக்கிறார்கள். வடமொழியைத் தலைக்கு மீது தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்கள், ஒரு பிழைக்கும் வழிக்காகவே இதற்குப் பெருமையை அளிக்கிறார்கள்.

இன்று இதுதான் சமயம் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு சமயத்திற்கும் வடமொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வடமொழி வளர்ந்தது இங்குதான் என்றாலும் அதன் அடிப்படை ஐரோப்பாதான். ‘‘இனம்’’ ஒன்றின் மூலமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்வது அது. ஜெர்மானியன் ஒருவன் ‘‘சம்ஸ்கிருதம்’’ தெரிந்திருந்தால் அவனைக் கொண்டு ‘‘யக்ஞம்’’ செய்விக்கலாம். ஆனால் அதே மொழி தெரிந்த தமிழன் ஒருவன் செய்யக்கூடாது என்கிற நியதியைக் கடைப்பிடிப்பது வைதிகம்.

நல்லது. சம்பிரதாயங்கள் தமிழிலும் உண்டு. வடமொழியில் சில குறிப்பிட்ட வேத சுலோகங்களைச் சொல்ல மாட்டேன் என்று தீயைக்கையில் வைத்து சத்தியம் செய்த பின்னரே தமிழ்நாட்டுக் கோயில்களில் சிலரைப் பூசை செய்ய அனுமதித்தார்கள். இம்மாதிரி பூசை செய்யும் பிராமணர்களை வடநாட்டினர். ‘‘திராவிட பிராமணர்’’ என்றே அழைத்தனர். (என்ன அது திராவிடர்? வேறொன்றுமில்லை - தமிழ் என்பது வடமொழியில் ‘‘த்ரவிட்’’ என்று உச்சரிக்கப்பட்டது அவ்வளவுதான். ‘‘ஒற்றைக் கல் மன்று’’ என்பது ‘‘ஒட்டகமண்ட்’’ என்று ஆங்கிலத்தில் மருவி, பின்னர் ‘‘உதகமண்டலம்’’ என்று தமிழுக்கே வந்தது போலத்தான்) வேத காலத்திலும் இந்த நிலை இருந்தது. விசுவாமித்திரரை ‘‘பிரம்ம ரிஷி’’ என்று கூறியதுண்டு. வசிட்டரை மறுத்துள்ளனர். வசிட்டர் பக்கம் சேர்ந்தவர்கள் அவரை பிரம்ம ரிஷி என்று பாட ஆரம்பித்தனர் என்பதெல்லாம் இந்தோ - ஆரியர்கள் வரலாற்றின் ஓர் அம்சமே தவிர, தென்னாடு சார்ந்தது அல்ல. ‘‘இந்திய வரலாறு’’ என்று இந்தோ - ஆரியர் சம்பந்தமுள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டுவிடுவதும் இங்கிருக்கும் எல்லாரும் இந்தோ - ஆரியர் என்று பாவிப்பதும்தான் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் முதல்படி. ஏன், இந்நாடு இருவேறு கலாச்சாரமுடையது, இந்தோ - ஆரியரும் தமிழரும் ஓர் இனமல்ல என்று வெளிப்படையாக ஓர் உண்மையாக எடுத்துக்கொள்ளக் கூடாது? இராமாயணத்தையும் பாரதத்தையும் படிப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அந்தக் காலம் இருக்கட்டும் - இப்போதும் வட இந்தியா பெரும்பாலும் பெர்சிய, அரேபியக் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றியிருக்கிறது. முக்காடு போட்ட பெண் தமிழகத்தில் அபசகுனமாகக் கருதப்படுகிறாள். வெள்ளைப் புடவை இங்கே விதவைக் குரியது. வடநாட்டில் இதற்கு நேர்மாறு.

கோவில் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், வடநாட்டில் அப்படி எதுவுமே கிடையாது என்ற சொல்லிவிட முடியும். வேதங்களிலோ, இதிகாசங்களிலோ கோவில் சென்று வணங்கியோர் இல்லை. வேதங்களின் வணக்கம் இந்திரனுக்கும் மற்றுமுள்ள மித்ர, வருணனுக்கும் செல்கிறது. விஷ்ணு என்னும் தேவன் இந்திரனின் வேலைக்காரன் என்று கூறப்படுவர்தான். சிவனைப் பற்றி இழிவாகப் பேசப்படுகிறது. இலிங்கத்தை வணங்கும் மக்கள் நீசர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்ரன் சிவன் அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். (பார்க்க: ரிக் வேத சுலோகம் 7-12-5 மற்றும் 10-99-3)

கோவில் என்று ஏற்பட்டதே தென்னகத்தில் தான். சங்க காலத்தில் கோவில் பற்றிய குறிப்புகள் இல்லை. சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கை பெருமான் என்று சிவன் கோவில் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழின் எல்லா இலக்கியங்களிலும் பூசனை குறிப்பிடப்படுகிறது-திருக்குறள் உட்பட.

கரிகாலன் கட்டிய கல்லணை இன்றைக்கு இருக்கும்போது, அந்த மன்னன் வாழ்ந்த அரண்மனை எங்கே? என்னவாயிற்று? என்ற கேள்வி நியாயமாகவே எழும். அவை எங்கேயும் பேய்விடவில்லை. இந்தப் பழங்காலக் கோயில்கள் யாவும்தாம் அரண்மனை என்ற முடிவைத் தரும். அது உண்மைதான். ஓர் அரண்மனையில் மன்னன் வணங்கி வந்த இடம்தான் கருவறை. மீதியுள்ள இடங்களாக நாம் இன்று காண்பவை ஓர் அரண்மனைக்குரிய சாயலில் அமைக்கப்பட்டதுதான். கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், சுரங்க அறை, நகைகள் பாதுகாக்கப்படுமிடம், பிரகாரத்தில் இருக்கும் வாகன அறைகள், மடப்பள்ளி, பெரிய மதில் யாவும் அரண்மனைக்குரியவை.

இவையெல்லாம் ஆய்வாளர் மேற்கொண்டு பல சங்கதிகளை அளித்துள்ளனர். என்றாலும் கோவில் இல்லாத சமயத்தில் அதாவது சங்க காலம் என்று வைத்துக்கொள்வோம், அப்போது கருவறையில் இருந்து மன்னனால் வணங்கப்பட்ட தெய்வம் எது?

தெய்வம் என்ற சொல்தான் எதைக் குறிக்கிறது? எம்மொழிச் சொல் அது? வடமொழியில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதப் பெயர்களிலே தேயு என்றால் நெருப்பு. அதற்குரிய சமஸ்கிருதச் சொல் ‘‘அக்னி’’ எதற்காக அதைத் ‘‘தேயு’’ என்று சொல்ல வேண்டும்? அது இனக்கலப்பால் நேர்ந்த ஒரு விஷயம் - ஒரு தந்திரமான போக்கு. பூர்வகுடிமக்களின் மொழியை ஆரியரால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது போயிற்று. ‘‘தீ’’ என்பதே தேயு ஆனது. அக்னி ஐரோப்பிய மொழி சார்ந்தது.

இருக்கட்டும்-இவ்வாறு கோவிலில், அதாவது அரண்மனையில் நெருப்பையோ, நெருப்பின் சாயலில் லிங்கத்தையோ, நடுகல்லையோ வணங்க, பின்னர் அவர்களுக்காகக் கட்டப்பட்டதுதான் கோவில். ஆரம்பத்தில் வணங்கிய இடம் அரண்மனைதான். கோவில் என்ற தமிழ்ச்சொல்லின் பொருளும் அதுவே.

கோவில் ஏற்பட்ட பின்னரும் இந்திரனுக்கும் அவனைப் போன்ற மற்றவர்க்கும் இந்த நாட்டு மக்களின் வணக்கம் கிடைக்கவில்லை. எனவேதான் இக்கடவுளரை ஆரியர் ஸ்வீகாரம் செய்தனர். பூர்வகுடி மக்களின் தெய்வங்கட்குத் தங்கள் தங்கள் வழக்கங்களை ஏற்படுத்திக் காட்டி, பலரும் நூல்கள் செய்தனர் - சங்கரர் உட்பட. இல்லையென்றால் பிறவா யாக்கைப் பெருமானும் முருக வேளும் முப்புரி நூல் அணிவிக்கப்படுவார்களா? விஷ்ணு காசியப கோத்திரக்காரரானார். ஆனால் விஷ்ணு என்ற சொல்லே ‘‘விண்’’ என்ற சொல்லிலிருந்து பெற்றதாக சேஷ ஐயங்கார் முதல் இன்றைய இந்திரா பார்த்தசாரதி வரை சொல்லியாகிவிட்டது.

இவ்வாறான கோவில் எப்போது தோன்றியிருக்க முடியும்? ஊர் என்ற இடம் ஏற்பட்ட பின்னர். விவசாயத்தை உரிய தொழிலாக முதன் முதல் கொண்ட மக்களும் இடமும் எவையென விஞ்ஞானிகள் சொல்ல வேண்டுமேயொழிய, வேதம் சொல்கிறது, புராணம் சொல்லிற்று என்று கூறும் கதா காலட்சேப பம்மாத்துக்காரர்கள். அல்லர்.

நீரைத் தேக்கி விவசாயம் ஆரம்பிக்கப்பட்ட முதலிடங்களாக எகிப்து, தென்னிந்தியா, இலங்கை என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் படிக்கலாம்.

வடமொழி இலக்கியங்களில் நர்மதை ஆற்றின் தெற்கேயுள்ள இடம் மனிதர்களே இல்லாத பிரதேசம் போல் ஒரு படம் காட்டப்படுகிறது. தெற்கே வேடர்தாம் இருந்தனர் - அதாவது மலைவாழ் மனிதரேயன்றி வேறு நாகரிகம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. இதைப் போன்ற பைத்தியக்காரத் தனமான வாசகங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. இலக்கியம் வரலாறல்ல. உலகைச் சுற்றி வந்தான் என்று அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருந்தால், எந்த இடங்களுக்கெல்லாம் என்ற கேள்விக்கு வரும் பதில் சைப்ரஸ், ஏதென்ஸ் என்பதுதான். கோசல நாட்டைச் சுற்றி வருவதுதான், உலகம் சுற்றி வருவது. அமெரிக்காவையும் சேர்த்து அல்ல என்று நமக்குத் தெரியும். தசரதனும் உலகை ஆண்டான். ஜனகனும் உலகை ஆண்டான். இருவரும் பக்கத்து நாட்டுக்காரர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர்கள்.

ஒரு நாட்டைச் சுற்றிக் காடு இருக்கலாம்.

அந்தக் காலத்தில் இங்கே தெலுங்கு நாட்டிற்கு பக்கத்தில் இருந்த தமிழ்ப் பகுதி அருவா நாடு. எனவே தெலுங்கர், தமிழ்நாட்டுப் பகுதிகள் எல்லாவற்றையும் அரவாடு என்றழைத்தது தெரியும். நர்மதை ஆற்றின் தெற்கிலும் காடுகளும் மலைகளும் குரங்கும் புலியும் இருந்தால் ஒரு வடமொழி இலக்கியக் கர்த்தாவுக்கு விநோதமான நாடாகத் தோன்றும். தென்திசை எல்லாமே அவ்வாறுதான் தெரியும். இது ஒருவனது நாட்டுப் பற்றோடு கலந்த சங்கதியும்கூட.

 

புதுச்சேரி

புதுச்சேரி விழித்துக் கொள்ளும் முன்னரே நான் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தேன். அண்ணாநகர் முதன்மை சாலை - கடைசியோ முதலோ - அது வரை வந்து நெல்லித் தோப்பு பக்கமாக திரும்பாது, வில்லியனூர் சாலையில் மெதுவாக நடந்தேன். அமைதியாக இருந்தது இடம். ஆள் அரவம் அதிகம் இல்லை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்றன. மற்ற பிரதேசங்களை விட, மரத்தின் உயரம் அதிகம் என்று தோன்றியது - இருக்கும். ஏதாவது வேற்றுமை தெரிய வேண்டும். பத்தாண்டகளாக வந்து போகிற இடம்தான். இருந்தாலும் புதிதாகவே தெரிந்தது. பழக வேண்டும். ஒரு வேளை நிரந்தரமாக இங்கேயே இருந்து அத்துடன் முடிந்தாலும் நல்லதே.

புதுச்சேரி விழித்துக் கொள்ளவில்லை என்று சொன்னது தவறு. காலையில் நடப்பவர்கள் அதிகமில்லையே தவிர வேறு இடங்களிலிருந்து வந்த வண்டிகள் ஓடிக்கொண்டு தான் இருந்தன. நாய்கள் தெருக்களில் அதிகமாக தென்பட்டன. குரைப்பது குறைவு.

புதுச்சேரி கிராமமா நகரமா என்ற ஐயப்பாடு ஏற்கனவே உண்டு. கிராமத்திற்கு அது, கிராமம். மண் குடிசைகளும், ஐரோப்பிய நகரங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களும் இருந்தபடியால், பார்த்துக் கொள்ள முடியுமே தவிர பதில் சொல்ல முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் சொல்ல வேண்டும். சித்தர்களைத்தான் படிக்க முடியுமே தவிர கேள்வி கேட்க முடியாது. குறைந்தபட்சம் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. முதலில் கேள்வி தோன்றுவதே கஷ்டம்.

இந்த வயதிற்கு இந்த ஆரோக்யம் போதும் என்று மருத்துவ நண்பர் பட்டணத்தில் கூறினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன் ஆன படியால் - அதுவும் நலத்துறை - மருத்துவர்களோடு நட்பு அதிகம். உடல் நலத்தைப் பற்றி திருப்தியாக சொல்ல முடியாது. மருத்துவர்களின் நட்பு மட்டும் உடல் நலத்தை தந்து விடாது - நடக்க வேண்டும். நேற்று நடந்து விட்டபடியால் இன்றைக்கு மாலையில் நடந்து கொள்ளலாமே என்றுதான் முதலில் எண்ணம் தோன்றியது. மாலையில் நடப்பது கடினம். விரைந்து செல்லும் மக்கள் கூட்டத்தில் நடை பயில முடியாது. கீழே விழ வேண்டியும் வரலாம். காலையில் தான் நன்று. பலர் நடந்து செல்வது இப்போது தெரிகிறது. வேறு சாலைகளில் இதைவிட அதிக கூட்டம் இருக்கலாம். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். இங்கே பேசும் தமிழ் மனத்திற்கு இதமளிக்கிறது. அநேகமாக ஆங்கில பேச்சு இல்லை. பட்டணத்தில் ஆங்கிலம் பேசியாக வேண்டும். நாற்பதுகளில் சென்னையில் தெலுங்கு பேசுவோர் அதிகமாக இருக்கும் அரசு அலுவலகங்கள் இருந்தன. அப்போது அங்கே ஆங்கிலம் தான் துணை. நாட்டிற்கு பொது மொழி வேண்டும் என்கிறார்கள் - உலகத்திற்கு வேண்டாமா என்ன? நிறைய படித்த நண்பர் சாரு நிவேதிதா கூட இந்தியாவின் பொதுமொழி இந்தி என்று குறிப்பிடுகிறார். அது சரிதானா? நாட்டு விடுதலைக்கு முன்னர் இந்தியாவின் பொது மொழி எதுவோ? அது சரி. ஒரு நாட்டிற்கு பொது மொழி கட்டாயம் தேவை - ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு பொதுமொழி இல்லாத நாடு ஒரு நாடாக இருந்திருக்குமா அல்லது நாடாகுமா - தெரியவில்லை.

கொசுக்கள் இருக்கின்றன. கொசுக்களால் மலேரியா பரவுகிறது என்று ரொனால்டு ராஸ் சொல்லி அறிந்தாயிற்று. சங்க காலத்திலும் மலேரியா இருந்திருக்கும். அப்போது யாரும் கொசுவை குற்றம் சொல்லியிருக்க மாட்டார்கள். அம்மையப்பன் என்று மணிவாசகர் அழைத்த சிவனையும் அப்படித்தானே பார்க்க முடியும். விவசாய நாகரீக கால கட்டத்திற்கு முன்னர் அப்பன் இருக்க முடியாததாகையால், சிவனும் இங்கே அப்படித்தான். இருக்கட்டும். என்றாலும் கூட எப்படி இந்த மணிவாசகர் ஒரு சித்தாந்தவாதியாகவும் கவிஞனாகவும் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை. சித்தாந்தம், தத்துவம் எல்லாம் அறிவுலகை சார்ந்தது. கவிஞன் அறிவுலகவாதி இல்லை அல்லவா? அப்படிப்பட்டவர்கள் கவிஞர் என்றும் பெயரெடுப்பது ரொம்பவும் கஷ்டம். எல்லாரும் வள்ளுவராகி விட முடியாது.

வணிகப் பத்திரிகைகள் இங்கு எந்தப் பகுதியிலம் கிடைக்கின்றன. சிறு பத்திரிகைகளை வாங்க குறிப்பிட்ட இடத்தில் உள்ள கடைவரை செல்ல வேண்டி உள்ளது. அதனாலென்ன - சிறு பத்திரிகைகளும் குறைந்துவிட்டன. மதவெறித்தனம் கொண்ட பத்திரிகைகூட தமிழில் சிறு பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகைகள் எங்கும் கிடைக்கின்றன. ஆனால் படிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்தே விடலாம். பத்திரிகை கடைகளில் கூட்டம் சேருகிறது. காலையில் முக்கிய செய்திகளை பத்திரிகை படிப்பதற்கு பதிலாக அந்தப் பத்திரிகை சுவரொட்டிகளை கண்டே அறிந்துவிடலாம்.

புதுச்சேரியின் எல்லா பகுதிகளும் பட்டணமாக மாறும் காலம் விரைவில் இருக்கும். கிராமச் சாயல் மாறிவிடும். அது வரப்பிரசாதமா - சாபக்கேடா - எப்படியும் இருக்கலாம். இங்குள்ள கவிஞர் ஒரு கவிதையில்,

எங்கேயடா என் கிராமம்
அடேய்? ரியல் எஸ்டேட்
பாவிகளே?

என்று மண்ணை வாரித் தூற்றுகிறார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சொல் - இரு சொல் - இவற்றில் கவிதை அம்சம் வெளிப்பட்டு விடுகிறது. கவிஞன் வெளிப்பட்டு விடுகிறான்.

- விருட்சம், 2008

 

பிற கட்டுரைகள்

புதுச்சேரி - 2
புதுச்சேரி - 3
புதுச்சேரி - 4

 

செய்கு தம்பிப் பாவலர்

மா. அரங்கநாதன்

தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் அவர்கள் நாஞ்சில் நாட்டில் கோட்டாறு பகுதியைச் சார்ந்தவர். சில சமயம் பாடங்கள் தவிர பொதுவான விசயங்கள் குறித்து பேசுவார். சங்க இலக்கியம், கம்பராமாயணம் போன்றவற்றை மிகவும் அழகாக போதிப்பார்.

ஒருதடவை வகுப்பில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். நாங்கள் கேட்டதற்கு உடைந்த குரலுடன் “பாவலர் போய்விட்டார்” என்று கூறி ரொம்ப நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் அவதானம் பற்றியும் அதை சாதித்தவர்கள் பற்றியும் விரிவாக கூறினார்.

ஆறுமுக நாவலர் நிறைவேற்றிய தசாவதானம் பற்றியும் பாவலர்தம் சதாவதானம் பற்றியும் அறியும் போது மனித மூளையின் ஆற்றல் பற்றி பிரமிக்க முடியும்.

பெரும்பாலும் ஞாபக சக்தியை அடிப்படையாக கொண்டு இந்த அவதானம் இருந்தாலும் வேறு பல சாகச செயல்பாடுகளும் இதில் உள்ளன என்று அறிந்தோம்.

ஆறுமுக நாவலர் அவர்களின் தசவதானம் பத்து நபர்கள் கேள்விகளைக் கேட்க அங்குமிங்குமாக அந்த இடத்தில் நடந்து ஒவ்வொருவரின் கேள்விக்கும் சரியான பதில்களை சொல்வதைக் கொண்டது. கேள்விகள் கேட்கும் போதும் அவர் நடந்தவாறு உருத்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டே “வேலும் மயிலும் துணை” என்ற வரியை பிசகாது சொல்லிக் கொண்டே வந்து முதற்கேள்வி கேட்டவரிடம் அதற்கான பதிலையும் அதுபோல மற்ற கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லி முடிப்பார். இடையிலே நடந்து கொண்டிருக்கும் போது தூரத்தில் யாரவது ஒரு செய்யுளைச் சொல்லலாம். அப்படிச் சொன்னது எந்த கேள்வியின் அடுத்ததாக என்று கூறி அது என்ன செய்யுள் என்றும் விளக்குவார். மேலும் ஏதாவது மலர் அல்லது மிருதுவான வஸ்து ஒன்றை அவர் முதுகிலே எறிவதுண்டு. அது எந்த கேள்வியின் போது என்பதையும் முடிவிலே சொல்ல வேண்டும்.

இது தசாவதானம். செய்கு தம்பிப் பாவலர் சாதித்த சதாவதானமும் முறைகளைப் பொறுத்தவரை இவ்வாறுதான். ஆனால் அது நூறு கேள்விகள் – அதற்கு ஏற்றார்போல் ஞாபக சக்திக்குச் சவால்விடும் சில விசயங்கள்.

கேள்விகள் வரிசையாக உட்கார்ந்து இருப்பவர்களிடமிருந்து ஒவ்வொன்றாக அவரவர்கள் பக்கம் பாவலர் வரும்போது கேட்கப்படும். பத்து வரிசையிலிருந்தும் நூறு கேள்விகள் என்ற கணக்கு. அவை தமிழ் இலக்கியம் என்பது மட்டுமல்லாமல் சில பொதுவான வகையாகவும் இருக்கும். சில விடுகதைகளாகவும் இருக்கும். இவையெல்லாம் போதாதென்று வேறொன்றும் வைத்தும் சோதனை செய்வதுண்டு. அது சீட்டுக்கட்டு சமாச்சாரம். வரிசையோடு இரண்டு நபர்கள் சீட்டுகளைக் கலைத்து மூன்று பேருக்குப் போட்டு விளையாட்டைத் தொடங்கியிருப்பார்கள். அந்த வரிசையில் வரும்போது இவர் பங்கிற்கு மற்றவர்கள் போட்ட சீட்டுகளை கவனித்து அதற்கு ஏற்றது போல் பதில் சீட்டுப் போட வேண்டும். போட்டுவிட்டு மற்றவர்கள் அதற்கு முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதிலைத் தந்து புது கேள்விகளையும் கேட்டு நடந்து அந்த சீட்டுக்கட்டுப் பக்கம் வரும்போது இவர் பங்கிற்கான பதில் சீட்டை போட வேண்டும். இது போன்ற முறை மற்ற அவதானங்களில் கிடையாது என்று தெரிகிறது.

ஒருவர் தாம் புதிதாக இயற்றிய வெண்பா ஒன்றின் சீர்களை மாற்றி முழுவதும் சொல்ல அவதானி மற்ற கேள்விகளுக்கு இடையே இந்த சீர்கள் எல்லாவற்றையும் யோசனை செய்து முதலடி, இரண்டாவது அடியின் தனிச் சீர் கடைசி அடியின் வார்த்தையானது நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றின் வெண்பா இலக்கணத்தோடு முடியும் விதத்தில் அந்த வெண்பாவை வகைப்படுத்தி முழுவதுமாக சொல்ல வேண்டும். இது மிகவும் கடினமான ஒன்று என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் பழந்தமிழ் மட்டுமல்லாது சித்தர் பாடல், அந்தாதி வகையறாக்கள், பழமொழிகள், நாட்டுப் புறக்கதைகள் இவை யாவும் கிட்டத்தட்ட வள்ளலார் காலம்வரைக்கும் நம்மிடையே பரவி இருக்கின்ற எல்லாவற்றையும் அவையினர் கேட்க ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்ட கால அளவுக்குள் பதிலைத் தருவார்.

பாவலர் அவர்கள் சதாவதானத்தை அனந்தபுரம், சென்னை மற்றும் இரண்டொரு இடங்களிலும் நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அவதானத்தை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் அனந்தபுரத்தில் நடத்தும் போது எண்பதுக்கும் மேலான கேள்விகளை சரியாகச் சொல்லி முடித்த பின்னர் அவையினர் பாவலர் அவர்கள் வியர்வைமல்க சோர்வுடன் அங்குமிங்கும் நடந்து நூறையும் முடிக்கும் ஆர்வத்துடன் இருந்ததை கண்டு அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் அவரை அணுகி “ஐயா, தாங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று வேண்டுகோள் விடுக்க பாவலர் தயங்கினாராம். அவையினர் திரும்பவும் “தாங்கள் நூறையும் சாதித்து விட்டதாகவே நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து உட்காருங்கள்” என்று வற்புறுத்த அவர் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள்.

சாற்றுக்கவி என்று சொல்லப்படுகிற ஒரு நபர் சம்பந்தப்பட்ட வெண்பா மற்றும் வேறுவகை பாவினங்களில் பல செய்யுள்களை எழுதி கொடுத்திருக்கிறார். தத்துவ ரீதியாக தமிழ் சைவ சித்தாந்தத்தை பாவலர் அளவிற்கு விளக்கியவர் யாருமில்லை என்பர்.

சென்ற நூற்றாண்டின் தமிழ் மொழியின் அதிசயங்களை நம்மிடையே கொணர்ந்தவர் பாவலர் அவர்கள். இன்றைய இளைஞர் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கடமை.

இம்மாதிரி அதிசயத்தக்க அறிவை கொண்டுள்ள பெரியோர் பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் போது மேலும் ஒன்று சொல்லலாம்.

பாவலர், மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், ந. சி. கந்தையாப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற மேதைகள் யாருமே கவிதை என்று எதுவும் எழுதவில்லை. சாற்றுக் கவிகள் போன்றவற்றை நிறைய எழுதியிருக்கலாம். அவர்களுக்குத் தெரியாத இலக்கியமோ இலக்கணமோ இல்லை.

கவிதை என்றால் என்ன என்று காலந்தோறும் கேட்கப்பட்டு வரும் கேள்விக்கு மேற்படி பெரியோர் போன்றவரே சான்று பகர்வர்.

 

கவிமணி

மா. அரங்கநாதன்


கவிமணியைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அவர் எங்களூர்க்காரர் என்ற எண்ணமே முதலில் ஓங்கும். பக்கத்து ஊர் என்றாலும் எங்கள் ஊரிலிருந்து பார்த்தால் கிட்டத்தட்ட புத்தேரியில் அவரது வீடே தெரியும். இரண்டு ஊரையும் பிரிப்பது பழையாறு என்னும் பஃறுளியாறு. “இங்கிருந்து கொஞ்சம் பலமாக சத்தமிட்டு கூப்பிட்டாலே அது புத்தேரி வரை கேட்கும் என்று ஊரிலே சொல்வார்கள்.

ஆங்கிலம் நன்கு அறிந்த கவிஞர்களில் பாரதியாரோடு கவிமணியையும் சேர்த்துச் சொல்வதுண்டு. கல்வெட்டுகள் பற்றி – காந்தளூர்சாலை போன்ற – கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகவும் இருந்ததாகவும் சிலர் சொல்வதுண்டு.

உமர்கயாம் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தவர். இரும்பு கூண்டிற்குள் புலியை வைத்துப் பாடிய வில்லியம் பிளேக் கவிதையை மொழிபெயர்த்தவர். ஆசிய ஜோதி மொழிபெயர்ப்பும் அவருடையதுதான்.

சிறுவயதில்தான் அவரை நேரில் பார்த்த அனுபவம் உண்டு. “என்னப்பேன் – என்ன படிக்கிறே” என்று முதுகைத் தட்டிக் கொடுத்தவர். எங்கள் ஊர் நூல் நிலைய கட்டிட திறப்பு விழா போன்றவற்றிற்கு வருவார். நூல் நிலையத்தின் பெயரை “நம்மாழ்வார் விவேக அபிவிருத்தி வாசக சாலை” என்று ஆக்கியவர் அவர்தான். ஒருதடவை கலைவாணர் என்.எஸ்.கே யுடன் ஒரு விழாவிற்கு வந்தார். எப்போது வந்தாலும் கோயிலுக்குப் போவது தவறுவதில்லை. “இது நம்மாழ்வாரின் ஊர் – அதற்காக பெருமைப்பட வேண்டும்” என்பார்.

18 வயதிலேயே சென்னை வந்து விட்டபடியால் இலக்கியம் பற்றியெல்லாம் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. சென்னையில் இருக்கும் போது கண்ணன் பத்திரிகையில் வந்த தனது பிள்ளையார் கவிதையை கவிமணியிடம் காட்டுவதற்காக புத்தேரி சென்றேன் என்று கிருஷ்ணன் நம்பி கடிதம் எழுதியிருந்தான்.

கிட்டத்தட்ட நாஞ்சில் நாட்டின் எல்லா ஊர்களிலும் கவிமணியின் உறவினர்கள் இருந்தார்கள். அவரது எழுத்தில் ஒன்றுகூட படித்து அறியாதவரும் “நான் அவருக்குச் சொந்தம்” என்று சொல்லிக் கொள்வதில் குறைவிருக்காது. பேசினால் அவரது வீட்டில் கிடைக்கும் முறுக்கு – தோசை பற்றிய விவரங்களே அவர்களது பேச்சாக இருக்கும். காபி கிடைக்காது. கவிமணி இல்லத்து முறுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்பார்கள். நானும் சாப்பிட்டிருக்கிறேன். டி.கே.சி இல்லத்து தோசையும் கவிமணி இல்லத்து முறுக்கும் அந்தக் காலத்தில் பேர் போனது.

நிறைய வாழ்த்துப் பாக்கள் இல்லையெனாது எழுதி கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒருவர் தனது வீட்டின் கதவை எப்போது திறந்தே வைத்திருப்பார். யார் வேண்டுமானாலும் அவரிடம் கேட்டுப் பெறலாம் என்ற பொருளில் எழுதிக் கொடுத்த வெண்பா ஒன்றை பின்னாளில் சென்னையில் அந்த நபர் என்னிடம் காட்டினார். அந்த வெண்பாவில் சொல்லப்பட்ட கருத்தை நாஞ்சில் நாட்டில் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – அத்துணை வள்ளல்த் தன்மை உடையவர் அந்த புண்ணியவான்.

இரங்கற் பாக்களும் உண்டு. ரசிகமணி டி.கே.சி அவர்களின் புதல்வன் செல்லையா காலமானதை அறிந்த கவிமணி வெண்பா ஒன்றை எழுதி அந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். அதைப் படித்த ரசிகமணி “இப்படி ஒரு கவிதையைப் பெற உயிரையே கொடுக்கலாம்” என்றார். அந்த வெண்பா :

எப்பாரும் போற்றும் இசைத்தமிழ் செல்வாவென்

அப்பா அழகிய செல்லையா – இப்பாரில்

சிந்தை குளிர சிரித்தொளிரும் நின்முகத்தை

"எந்தநாள் கண்பேன் இனி".

மயா – இன்கா நாகரிக காலகட்டத்து எழுத்து ஓவியங்கள் பற்றி ஒரு மேனாட்டு பேராசிரியர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அந்த நாகரிக கால கட்டத்தில் – அமெசான் நதிக்கரையில் வாழ்ந்தவர்களில் பெண்கள்தாம் வேட்டைக்குச் சென்று உணவு சேகரிக்கும் வேலையை செய்தனர் என்றும் வில்லை வளைத்து அம்பு தொடுக்க தங்களது ஒரு புற மார்பு இடையூறாக இருந்த காரணத்தால் அதை சிறு வயதிலேயே வெட்டி எடுத்து விடும் வழக்கம் அந்த இன மக்களிடம் இருந்தது என்றும் எழுதி, தமிழ் நாட்டிலும் அதே நாகரிகச் சான்றுகள் இருக்கின்றன என்றும் கூறியிருந்தார். இதைப் படித்துவிட்டு கவிமணி அவர்கள் “ அடப்பாவி மனுசா – இங்கே உள்ளது அர்த்தநாரீசுவரர் சிலை – இது வேறு” என்று பதைபதைத்து எழுதினார். “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று பாடல் இயற்றினார். ஆனால் யார் சொல்லி என்ன நடந்து விட்டது – பெண்ணினம் இன்றும் அடிமை தானே.

வையாபுரி பிள்ளை அவர்கள் கவிமணியின் நெருங்கிய நண்பர். அவரது இல்லத்துக்கு அடிக்கடி வருவதுண்டு. டி.கே.சி, கல்கி போன்றோரும் வந்திருக்கிறார்கள்.

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெ டுப்பது கவிதை.

என்று எழுதிய கவிமணியிடம் ஒரு அன்பர் அந்த வரிகளைப் பற்றிப் பேசிய போது அதற்கு அவர் கீழ்க் கண்டவாறு பதில் சொன்னாராம்.

“உள்ளத்து உள்ளதுதான் கவிதை. இன்பம் உருவெடுப்பதுதான் கவிதை. ஆமாம். இப்போது நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்டுக் கொள்கிறேன்.

 
More Articles...
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved